Kallum Kaniyalaam

மகளும் மருமகனும் இப்பதான் கிளம்பி வீட்டை போறாங்க. ரண்டுபேரையும் அனுப்பிட்டு மரத்தடியில கிடந்த சாய்மனைல வந்து உக்காந்தன். என்ட மகளோட நான் பழகிற வாய்ப்பு எனக்கு கிடைச்சதில்லை. அது எனக்கு ஒரு கவலையாகப்பட்டது இல்லை. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிட்டினதுக்காக நான் சந்தோசப்படுறன். அதுக்காக 'இந்தவாய்ப்பை எனக்கு தந்தது கடவுள் தான், கடவுளுக்கு நன்றி' என்று சொல்ல மாட்டன். எனக்கு கடவுளை எனக்கு பிடிக்கிறதில்லை. அப்படி நன்றி சொல்லுறது என்றால் ஆமிக்காரங்களுக்கு சின்ன நன்றி சொல்லலாம். மகள்ட இடத்தில ஆமிபிரச்சினையாம். ஆமி உள்ள வந்தால் இளமாக்களுக்கு பிரச்சினை என்று இடம் பெயர்ந்ததால தான் எனக்கு இந்த குறுங்கால சந்தோசம் என்றாலும் கிடைச்சுது. மகளும் மருமகனும் மகள்ட குட்டி மகனும் இங்க இருந்த 6..7 மாதங்கள் உண்மையா ஒரு வித்தியாசமான நாட்களாக தான் இருந்தது. இப்ப அவங்க போட்டாங்க.

ஜயோ ! ! ! போட்டாங்க இனி நான் தனிய தானே என்று கவலைப்பட்டு கொண்டு இருக்கிற ஜீவன் நான் இல்லை. எனக்கு எதையும் தாங்கும் இதயம் ஒன்றை நானே உருவாக்கி வைச்சிருக்கன். எல்லாம் வாழ்க்கையின் பாடங்களில இருந்து வந்தது தான். சோகம் இல்லை சொந்தம் தேவையில்லை என்று வாழுற ஆள் நான். எல்லோர் கூடவும் கதைப்பன். ஆனால் அளவாக தான் கதைப்பன். கண்டால் மட்டும் கதைப்பன். அவளவும் தான். யாரையும் தேடி நான் போனதில்லை. 'என்ன இவனை கன நாளா காணலையே என்ன ஆச்சு?? தனியா இருக்கிற மனுசன்' என்று யாரும் என்னை தேடி வந்ததும் இல்லை. அந்த அளவுக்கு யார் கூடவும் நான் நடந்துகிட்டதும் இல்லை.

'ஆமா உங்களுக்கு ரத்த சொந்தங்கள் யாரும் இல்லையா?? குடும்பம் என்று ஒண்டும் இல்லையா??' என்று யாரும் நினைக்கலாம். 'இருந்திச்சு இப்ப இல்லை' என்று நான் சொல்லுவன். இப்படி நான் தனியா இருக்கிதால எனக்கு கஸ்டம் என்றோ.. கவலை என்றோ... ஏக்கம் என்றோ.. ஏதும் இல்லை. உண்மையில் உறவுகளோட சேர்ந்து இருந்தால் தான் இந்த கஸ்டம் கவலை ஏக்கம் எல்லாம் வரும் என்கிறது என்ர கருத்து.

நான் வாழ்கைல நிறைய விசயங்களை இழந்திட்டு.. சும்மா வீணாண நியாங்கள் கூறிக்கொண்டு வறட்டு கௌரவத்தோட இருக்கிறதா யாரும் நினைக்கலாம். ஆனால் அப்படி இல்லை. வாழ்க்கையின் முழுமையை என்ட நாளாந்த வாழ்க்கையில நான் காணுறன். யார் என்ன சொன்னாலும் அதைபற்றி எனக்கு கவலையில்லை. ஏன் என்றால் மற்றவங்களுக்காக நான் வாழல, எனக்காகத் தான் நான் வாழுறேன்.

மரத்தடியில இருந்து எனக்குள்ளேயே நானே பேசிட்டு இருந்தன். இப்ப உங்களுக்கு நல்லவே புரிஞ்சிருக்கும் நான் 23..24 வருசமா தனியாவே வாழ்ந்திட்டு, வாழ்க்கையின் முழுமையை காண்கிறேன் என்று சொன்னதின் அர்த்தம். இப்படி வரட்டுகௌரவம், அதுவும் எனக்குள்ளேயே, என்னோடு நான் பேசிட்டு இருக்கிறது என்ர முக்கியமான பொழுதுபோக்கில ஒண்டு.

லொறி ஓடுறது எனது வேலை. நினைச்சதை செய்ய எங்கட வேலையிடத்தில என்னால மட்டும் தான் முடியும். ஏன் என்றால் நான் மட்டும் தான் தனி ஆள் எங்க வேலை இடத்தில. தூர இடங்களுக்கு லோட் எடுத்திட்டு போக கூட நான் தான் ஒத்துக்கிறது. நினைச்ச இடத்தில சாப்பிடுவன். எப்ப பசிக்குதோ அப்ப சாப்பிடுவன். எப்ப தூக்கம் வருதோ அப்ப படுப்பன். எங்கே என்றாலும் படுப்பன். தொடர்ந்து 2..3 கிழமையாக லொறி ஓடுவன். அதில எனக்கு சலிப்பு என்று ஒன்றும் இல்லை. இது எங்க வேலை இடத்தில எல்லாராலும் முடியாது. ஏன் என்றால் அவங்களுக்கு குடும்பம் குட்டி என்று இருக்கும். இரவு எப்படியும் போகணும் வீட்டில மனுசி தனிய.. பிள்ளை தனிய.. பிள்ளைக்கு அது இது... என்று அவங்களுக்கு நிறைய சோலி இருக்கும்.

எனக்கு இது ஏதும் இல்லை... சில நேரங்கள்ல அவங்க வேலைகளை நான் தான் பாக்கிறது. அவங்களுக்குபதிலா நான் லோட் கொண்டு போறது. இதால எங்க முதலாளிக்கும் என்னில நல்ல இஸ்டம். பல நேரங்கள்ல நானா ஏதும் முடிவு எடுத்து செய்திட்டு முதலாளிக்கு போய் சொன்னால் கூட முதலாளி ஏதும் சொல்லுறதில்லை. காரணம் அவருக்கு என்னில ரொம்ப பற்று. முதலாளிக்கு மட்டும் இல்லை. கூட வேலை பார்க்கிறவங்களுக்கும் என்னில பற்று. காரணம் அவங்களுக்கு லீவு வேணும் என்றால் நான் தானே அவங்க வேலையை செய்கிறது.

எல்லோரும் என்னில பாசம். ஆனால் நான் அவங்க பாசத்துக்கு அடிமைப்பட்டது கிடையாது. சாப்பிட கூப்பிடுவாங்க, என்னை தனி ஆள் என்ற படியால். ஆனால் நான் போனதில்லை. எனக்கு பிடிக்கிறதும் இல்லை. அதுக்காக என்னை ஒரு மாதிரியான ஆள் என்று நினைச்சால் அது தப்பு. வேலைஇடத்தில எனக்காக சாப்பாடு குடுத்துவிட்டால் வாங்கி நல்லாவே வெட்டுவன். ஆனால் எதிர் பார்க்கமாட்டன்.

எனக்கு லீவு தேவையில்லைத்தான் இருந்தாலும்... சில வேளைகள்ல ஒரு கிழமைக்கு லீவு போடுவன். வீட்ல தான் இருப்பன். விரும்பின சாப்பாடுகளை நானே சமைச்சு சாப்பிடுவன். அரசியல்ல எனக்கு கொஞ்சம் ஆர்வம் இருக்கு. பேப்பர் சஞ்சிகைகள் வாங்கீட்டு வந்து படிப்பன். வேலைல சரி வீட்ல சரி நல்லா ரெடியோ கேட்பன். சினிமா பாட்டு என்றால் எனக்கு ரொம்ப இஸ்டம். பழைய பாட்டில இருந்து இனிக்கு வந்த பாட்டுவரைக்கும் ஒண்டும் விடாமல் கேட்பன். படம் பார்க்கிறதில்லை நான்.. ஆனால் லீவு நாட்கள்ல எப்பவாவது தியேட்டருக்கு போய் படம் பார்ப்பன். இவைகள் தான் எண்ட தனிமையை இனிமையாக்கிற சில விடயங்கள் என்று சொல்லலாம்.

ஒருவேலையும் இல்லை என்றால் இந்த மரத்தடி சாய்மனைல படுத்துக்கொண்டு எனக்குள்ளேயே நான் வறட்டு கதைகளை பேசிட்டு இருப்பன். மற்றவங்களுக்கும் சொல்லுவன், 'இப்படி நான் தனிமைல இருக்கிறது தான் எண்ட பலம் என்று'

ஆனால் இப்ப கொஞ்ச நாள் எனக்கு வித்தியாசமா... என் கொஞ்சம் சந்தோசமா போய் இருக்கு என்று சொல்லலாம். எல்லாம் என்ட மகள், மருமகன், மகள்டமகன், வந்து நிண்டதுதான். மகளை நான் பிரிஞ்சது அவள் 3 மாத குழந்தையா இருக்கும் போது. ஆரம்பத்தில மகளை பார்க்கணும் என்ற தவிப்பு இருந்ததுதான். ஆனால் பிறகு இருக்கல. இப்ப என்னமா வளர்ந்து நிற்கிறாள்.. இப்ப அவளுக்கு 23.. 24 வயது இருக்கும் என்று நினைக்கிறன்.

" உங்களை யாரோ சந்தில விசாரிக்கினம்.. யாழ்ப்பாணத்தில இருந்து இடம்பெயர்ந்த ஆட்களாம்" என்று பக்கத்து வீட்டு பெடியன் வந்து சொன்ன போது... எனக்கும் யாரோ ஆட்கள் இருக்காங்களா?? என்று போய் பார்த்தன்.

அப்ப ஓடி வந்து என்னை கட்டிபிடிச்சு அழுதவள். 3 மாதத்தில பிரிஞ்சும் அவள் என்னை போட்டோல பார்த்தே அடையாளம் கண்டு பிடிச்சிருக்காள். ஆனால் அவள் வாயால சொல்லும் வரை எனக்கு தெரியாது அவள் யார் என்று. அப்படி ஒரு கல் நெஞ்சுக்காரனா இருந்து இருக்கன் நான். அன்னில இருந்து இன்க்கு அவள் போகுமட்டும் என் மேல அவள் காட்டின அன்புக்கு அளவே இல்லை. எனக்கு அன்பு செய்ய இப்படி ஒரு ஆள் இருக்கா என்று நான் நினைச்சதே இல்லை. அந்த அளவுக்கு அவள் பாசம் என்மேல இருந்தது. இதுவரைக்கும் அவள் பிறக்கிறதுக்கு காரணமா இருந்ததை தவிர நான் அவளுக்காக எதுவுமே செய்யல.

அப்படி ரொம்ப பாசம் அவள் என்மேல. ஆனால் ஒரே ஒரு விசயத்திலதான் எனக்கும் அவளுக்கும் பிரச்சினை வாறது. அவங்க அம்மா பற்றி பேச்சு வந்தால் தான். ஆனால் அப்படி பேச்சு வந்தால் நான் ஒன்றும் பேசுறதில்லை. அவள் பேசுறதை மட்டும் கேட்டுகொண்டிருப்பன். அவள் சொல்லுற விடயங்கள் எல்லாமே எனக்கு சரியப்பட்டதால தான் நான் பேசாமல் இருந்தனோ என்னவோ. எப்பவும் அவள் அவங்க அம்மாவை விட்டு குடுத்து கதைக்கிறது இல்லை.

சில வேளைகளில 'அப்படி உங்க அம்மா நல்லவாவா இருந்தால், அவா நியாயமான ஆளா இருந்தால் உன்கூட சேர்ந்து இங்க வந்திருக்கலாம் தானே.. ஏன் அவ வராமல் உங்களை மட்டும் அனுப்பினா??' அப்படி என்று நினைப்பன். ஆனால் ஏனோ நினைக்கிறதை மகள்கிட்ட சொன்னதில்லை.

என்ட மருகனும் ஒன்னும் குறைஞ்ச ஆள் இல்லை.. மகளோட சரி.. என்னோட சரி நல்ல மாதிரி, தங்கமான ஒரு பெடியன். என்ட வறட்டு கவுரங்களை எல்லாம் எனக்கு முன்னாலேயே ஒரு பயமும் இல்லாமல் சொல்லி பேசுவார். ஆனால் எனக்கு என்னவோ கோபம் வந்ததில்லை. அவர் சொன்னதில நியாயம் இருந்ததால கோபம் வரலையோ என்னவோ நான் கோபப்பட்டதில்லை. ஆனால் அவர் சொன்னதுக்காக என்னில ஒரு மாற்றத்தை காட்டியதும் இல்லை. என்ட பேரன்.. அவனைப்பற்றி சொல்லவே தேவையில்லை. உவடம் எல்லாம் குப்பையாக்கிறதில ரொம்ப கெட்டிக்காரன்... சின்ன பிள்ளைகள் செய்கிற குறும்புகளை பொறுமையோ ஏற்று ரசிக்கிற பாக்கியம் எனக்கு ஒரு பிள்ளை இருந்தும் எனக்கு கிடைக்கல. இருந்தாலும் அந்த இப்ப எனக்கு அந்த குறையில்லை என்றால் அதுக்கு காரணம் அவன் தான் காரணம்.

மகள் போன பிறகு கொஞ்சம் இருந்து பழைய நினைவுகளை அசைப்போட்டது காணும் நாளைக்கு வேலைக்கு போகணும் என்கிறது நினைவுக்கு வர... 'சரி இனி எழும்பி போய் சாப்பிட்டு படுப்பம்' என்று எழும்பி வீட்டுள்ள போனன். வீட்டுக்குள்ள போக வீடு ரொம்ப துப்பரவா இருந்தது. அப்பா தனிய இதேல்லாம் செய்ய மாட்டார் என்று மகளும் மருமகனும் செர்ந்து இனிக்கு காலைல இருந்து துப்பரவு செய்தது தான். ஆனால் மற்றும் படி இப்படி இருக்காது... எண்ட பேரன் எல்லா சாமானும் எடுத்து அங்கே இங்கே என்ரு எறிஞ்சு இருப்பான்.. அதை பொறுக்கிகொண்டு வாறதில தான் எனக்கு ஒரு சந்தோசம். எதோ மனசு கொஞ்சம் ஒரு ஆட்டம் கண்ட மாதிரி இருந்தது.

குசினிக்குள்ள போனன்...குசினிக்குள்ள நான் உள்ளட்டு ரொம்ப நாள். மகள் நிண்ட நாள்ல ஒரு நாள் தன்னிலும் என்னை ஒரு வேலை செய்ய அனுமதிச்சதில்லை அவள். குசினிக்குள்ள போக மகள் உள்ள நிண்டு "போய் இருங்கப்பா நான் சாப்பாடு கொண்டு வாறன்" என்று சொல்லுற மாதிரி ஒரு பிரமை. போய் சாப்பாட்டை பார்த்தன். எனக்காக சமைச்சு மூடி வைக்கப்பட்டு இருந்திச்சு. இனிக்கு தானே கடைசி.. இனி வேலையால வந்து நான் தானே சமைக்கணும் என்று மனசு ஏதோ சோகமா ஃபில் பண்ணி சொல்லுற மாதிரி பட்டுது.

'அட நீயா இப்படி சோகமா கதைக்கிறது... நீ எம்மாம்ப்ட்ட ஆளடா?? உன்ட கொள்கை எல்லாம் எங்கே?? ஏதோ பந்தாவா நிறைய எல்லாம் சொன்னியே... அது எல்லாம் எங்கே போட்டுது?? ' என்று என் மனசைப்பார்த்து நானே கேட்டன். சோகம் வந்தா கதைக்காமல் இருக்கிறது நல்லது, என்ட மனசும் அப்படித்தான்.. நான் சொன்னதுக்கு பதில் ஒன்னுமே சொல்லல. சாப்பாட்டை போட்டு சாப்பிட போனன். ஆனால் என்னால முடியல, இனந்தெரியாத சோகம் ஒன்று என்னை கஸ்டப்படுத்திச்சுது. சாப்பிட மனசு வரல.

" அப்பா நீங்க இனியாவது வந்து எங்க கூட இருங்களேன்.. உங்க கடைசி காலத்தில தனிய இங்க இருந்து என்னத்தை பண்ண போறிங்கள்?? " என்று இப்ப கடைசி கிழமையா அடிக்கடி என்ட மகள் கேட்டது நினைவில வந்து வந்து போச்சுது. ஆனால் அதுக்கு நான் ஒரு பதிலும் சொல்லல, மருமகனும் வந்து கேட்டுப்பார்த்தவர், ஆனால் அதுக்கு உருப்படிய நான் ஒரு பதிலும் சொல்லல, என்ட குணமும் அவைக்கு நல்லவே தெரியும், நான் இப்படி இருக்கிறதுக்கு நான் பட்ட கஸ்டங்களும் காயங்களும் தான் காரணம் என்று அவைக்கு தெரிஞ்சிருக்கணும் என்று நினைக்கிறன்.

கடைசியா போகும் போதும் மகள் தன்ட மகனிட்ட சொல்லி கேட்டது " அப்பப்பாவை எங்க கூட இருக்க சொல்லி கேள்" என்று. ஆனால் அப்ப கூட எனக்கு மனம் விட்டு கொடுக்கல, அந்த அளவுக்கு கல் நெஞ்சகாரன் நான். உண்மையில நானும் எல்லோரையும் போலத்தான் மற்றவங்களை புரிஞ்சுக்கிற ஒரு ஆளா இருந்தனான். ஆனால் இப்ப ஏனோ நான் அப்படி இல்லை.

மனசில ஏதோ ஏதோ நினைவுகள் எல்லாம் வந்து போச்சுது, இந்த 20 வருசத்தில நினைவுக்கு வராத பழைய நினைவுகள் எல்லாம் எனக்கு வந்து போச்சுது, ஏனோ மனசு வலிக்கிற மாதிரி இருந்தது, உறுதியா இருந்த என்ட மனசு இப்ப ஏதோ என்ன செய்கிறதென்டு அறியாமல் தவிக்கிற மாதிரி இருந்திச்சு. இப்ப எனக்கு என்ட மகள் மேல கோபம் வாற மாதிரி இருந்தது. இருட்டில கண்ணை இருட்டுக்கு பழக்கிட்டு போய் கொண்டிருந்த என்னை கொஞ்ச நேரம் முன்னால வந்து லைட்டைக் காட்டி சந்தோசப்படுத்திட்டு.. திருப்ப தவிக்க விட்ட மாதிரி இருந்தது.

மனசை கொஞ்சம் கட்டுப்படுத்திட்டு படுத்திடுவோம்.. நாளைக்கு வேலைக்கு போய் வர எல்லாமே சரிவரும் என்று நினைச்சிட்டுபடுக்க போனேன். என்ட ரூம்ல போய் உடுப்பு மாத்த உடுப்பை பார்த்த போது. கீழ ஒரு பாக்ல என்ட உடுப்பு எல்லாம் அடுக்கி வைச்சிருந்திச்சு. அது ஒண்டுமில்ல. நான் பதில் சொல்லாவிட்டாலும் போகும் போது நானும் சேர்ந்து அவங்ககூட வருவன் என்று நினைப்பில என்ட மகள் என்ட உடுப்பு எல்லாம் எடுத்து பாக்ல றெடியா அடுக்கி வைச்சு இருந்தாள்.

எனக்கு எல்லா நினைப்புகளும் மாறி மாறி வர.. அப்படியே உடுப்பு பாக்ல சாய்ஞ்சு கொண்டே யோசிச்சன். இப்ப நான் திரும்ப போனால் என்ன நடக்கும் என்று ஒரு முறை நினைச்சுப்பார்த்தன். அதை என்னால ஜீரணிக்கமுடியாமல் இருந்தது. ஆனால் போகாமல் இனியும் இங்கே தனிய இருக்கிறதை நினைச்சுப்பார்க்கவே முடியல. மகள் சொன்ன வார்த்தைகளை நினைச்சுப்பார்த்தன்.

இப்ப கூட போனால் மகள் கூட சேர்ந்து போகலாம் பஸ்ஸுக்கு வெயிட் பண்ணி கொண்டு இருப்பாங்க போய் சேர்ந்துக்கலாம் என்று மனசு சொல்லிச்சு. இவளவு காலமும் என்ட சொல்லு கேட்ட என்ட மனசு எப்ப எனக்கே கட்டளை போட பாக்கை எடுத்து க்கொண்டு மகள் பஸ்ஸுக்கு வெயிட் பண்ணுற இடம் நோக்கிப் புறப்பட்டேன்.

(முற்றும்)

எழுத்துப்பிழைகள், மற்றும் ஏனைய பிழைகளை சுட்டிக்காட்டவும் :roll: :roll:

1 reacties:

Saravanavadivel said...

Nice Kavidhai, Keep on Post…

http://www.whizzcamera.com